Friday, March 04, 2005

இழந்து இருக்கிறோம்

ஒரு காலத்தில் தென் ஆசியாவின் மிகப் பெரிய நூலகம். எத்தனையோ மனிதர்களை மாமேதைகளாக்கிய நூலகம். சில சிங்களவர்களும் மரியாதை கொடுத்து வந்த நூலகம். எங்கள் யாழ் நூலகம். 1981ஆம் ஆண்டு யூன் 31ம் திகதி இரவு நூற்றுக்கு மேற்பட்ட சிங்களக் காடையர்களினால் காமினி திசானாயகாவின் நேரடி வழிநடத்தலில் எரித்து நாசமாக்கப்பட்டது. தமிழ் சுவடிகள் ஓலைகள் உட்பட அண்ணளவாக 95.000 வகையான பிரதிகள் ஒரே இரவில் எரித்து அழிக்கப்பட்டன. தமிழே முக்கால்வாசி அந்த இரவில் எரிந்ததெனவும் கொள்ளலாம். இப்படி எரிக்கப்பட்ட காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

உங்கள் தாய் நாடு இது இல்லை என்ற பின்பும் ஏன் இனவேறுபாடுகள் இருக்கிறதென்று கூறி தொடர்ந்தும் இங்கேயே இருக்கிறீர்கள் உங்கள் திராவிட நாட்டிற்குச் செல்ல வேண்டியதுதானே அங்கே இனவேறுபாடுகள் இல்லை. உங்கள் கோவில், உங்கள் கடவுள், உங்கள் கலாச்சாரம், உங்கள் கல்வி. உங்கள் பல்கலைக் கழகங்கள். எல்லாம் அங்கே இருக்கின்றன உறங்கும் சிங்களம் எழும்பி தமிழர் தமிழீழத்தினை இலங்கையில் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அறிந்தால் நிலமை சுமூகமாக இருக்காது. ஆகவே தமிழர்கள் உறங்கிக்கொண்டு இருக்கும் சிங்கள சகோதரர்களை எழுப்பாமல் இருப்பது உசிதமானது. நித்திரையில் உள்ள சிங்கத்தினை எழுப்பினால் சிங்கம் அமைதியாக இருக்காது என்பதனை அறிவீர்கள். இது லொக்கு பண்டார என்பவரது பேச்சு.

நாங்கள்தானே ஆள்பவர்கள். நாங்கள்தான் ஆளவேண்டும். சிறுபான்மையினரிடம் கொடுக்க
முடியாது. நாங்கள் சிங்களவராகவும் பௌத்தர்களாகவும் இந்த நாட்டில்தான் பிறந்தோம். நாங்கள்தான் இங்கு பெரும்பான்மையினர். ஆகவே நாங்களே ஆளுவோம்
. இது விமலா கன்னங்கரா.


இன்னொருவர், இல்லை! எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழ்த் தலைவர் என்பவரைப் பிடித்து அண்மையில் உள்ள ஒரு கொங்கிறீட் போஸ்டில் கட்டி வைத்து அவர் சாதாரணவாசி போல் மாறும்வரை அவருக்கு சவுக்கடி கொடுப்பேன். இதற்குப்பின்னும் யாராவது அவரைப்போல செய்தால் அவரைப் பிடித்து ஆற்றில் எறிந்து விடுவேன் இப்படிச் சொன்னவர் சந்திரபால என்பவர்.

இப்படிப் பலர் தமிழுக்கும் தமிழனுக்கும் எதிராக பேசினார்கள். இவ்வளவும் இந்த நூலகம் அழிக்கப்பட்ட காலங்களில். வெறும் பேச்சுக்கள் என்று மாத்திரம் இல்லாமல் பல அரசியல், முக்கியத்துவம் வாய்ந்தது எங்கள் நூலக அழிப்புச் சம்பவம். அன்று நடந்த சம்பவங்களுக்கு அல்லது சிங்களத்தின் சீர்கெட்ட வன்முறைகளுக்கு பெரும் சான்றாக நேற்றுவரை இருந்தது எங்கள் நூலகம்.

இதை எப்படி மீளக்கட்ட முடியும்? மீளக்கட்டுவது என்பது இத்தனை வருடம் சிங்களத்தின் காட்டுமிராண்டித் தனத்துக்கு சான்று பகர்ந்த எங்கள் நூலகத்தினை மறுபடி எரிப்பதற்குச் சமனானதாகும். அன்று தமிழனின் புலமைக்கு பேர்போன நூலகம் அழிக்கப்பட்டது இன்று சிங்களவரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு சான்றாய் நின்ற நூலகம் அழிக்கப்பட்டு இருக்கிறது.

சிலர் என்னைத் தவறாக நினைக்கலாம். நூலகம் தேவைப்படுகிறதென்றால், புதிதாக ஒன்றை அந்த நூலகத்திற்குப் பக்கத்திலேயே அழகாகக் கட்டி இருக்கலாம். எத்தனையோ நவீன வசதிகளும் அமைத்தும் இருக்கலாம். அதைவிட்டு விட்டு எதற்காக எங்கள் வரலாறு சொல்லும் ஒரு பொக்கிசத்தினை புனரமைப்பு என்ற பேரில் இல்லாமல் செய்யவேண்டும்.

சரி, நாளைக்கு ஒரு நவீன சாதனத்தினைப் பொருத்தவேண்டும் என்ன செய்வது? அந்தப் பழைய கட்டடத்தில் ஓட்டை போடுவதா? ஒரு Lift பொருத்தவேண்டும்! முடியுமா? பிறகென்ன புனர் நிர்மாணம்? அதைவிட இருந்த பழந்தமிழ் ஓலைகள் எல்லாவற்றை எல்லாம் எங்கு போய் மறுபடி எடுப்பது.

அறிவாளிகள் புத்திஜீவிகள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? ஏன் இவர்கள் இதைத் தடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஆனால் சில விடயங்கள் கேள்விப்பட்டேன். எத்தனையோ லட்சங்கள் செலவாகி இருக்கிறது இந்தப் பணிக்கு, அதில் எத்தனையோ லட்சங்கள் தனிப்பட்ட (கும்பல்) சிலரது சட்டைப்பைக்குள் சென்று இருக்கிறது. அரசின் இந்த "மூடிமறைப்பு'' திட்டத்திற்கு இப்படியான சுயநலக் கும்பல்களின் ஆமோதிப்பு தான் இந்த புனரமைப்பு என்கின்ற பெயரில் கொள்ளை நடக்கக் காரணமாய் இருந்திருக்கிறது.

கொள்ளை ஒரு பக்கம் இருக்கட்டும் அரசியல் பக்கம் பாருங்கள் எங்கே ஓர் தருணம் கிடைத்தால் தமிழ்ப்பெண்ணுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுக்க விரும்பும் அம்மையாருக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கெல்லாம் தான் தமிழர் மீது அக்கறையான ஓர் ஜனாதிபதி என்று காட்டுவதற்கு பிரசித்தி பெற்ற தமிழர்களின் நூலகத்தினை அரசுதான் புனரமைத்துக் கொடுத்தது என்று அதனை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறாராம்.

ஆக எங்கள் நூலகத்தினை புனரமைக்கிறோம் என்று சொல்லி இறுதியில் இருந்ததினை விட இழந்து விட்டு இருக்கிறோம். ஆனால் யாரும் அதைக் குறித்துக் கவலைப்படுவதாய் இல்லை. நேற்றும் ஒருவர் என்னிடம் புது நூலகம் பற்றிப் பெருமையாகப் பேசினார். எது எப்படி இருப்பினும் இந்த முழு திட்டத்திற்கும் ஓடித்திரிந்த அந்தத் தனிப்பட்ட கும்பல்
லண்டன் வந்து தம்பட்டம் அடிக்காதவரை சந்தோசம்,

அவர்களுக்கு!

3 comments:

வசந்தன்(Vasanthan) said...

உண்மைதான் எல்லாளன். என் கருத்தும் அதுவே. அக்கட்டடம் அப்படியே இருக்கத்தக்கதாக புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்பதே என் நிலைப்பாடு. எனது மட்டுமல்ல, பலரினதும் கருத்தாகும். புனரமைப்பு என்று செலவிட்டதில் புதிய கட்டடமே கட்டியிருக்கலாம். இப்போது என்ன கட்டடத்தைப் பூசி மெழுகியதுபோல சம்பவங்களையும் பூசிமெழுகியாயிற்று.

HS said...

உண்மைதான் எல்லாளன். என் கருத்தும் அதுவே

Thangamani said...

ஜப்பானில் ஹிரோசிமா நகரசபைக் கட்டிடம் இன்னும் அணுஆயுத சேதத்தை உலகுக்குச் சொல்லியபடியே இருக்கிறது. நூலகம் மீளமைப்பு செய்யப்பட்டிருக்கக்கூடாது. அது தமிழர்க்ளின் ஒரு போராட்ட சாட்சியம்.