Thursday, February 17, 2005

சுனாமி முடிந்துவிட்டது

சுனாமி முடிந்துவிட்டது சனம் ஆறப்போகுது மச்சான் ஏதாவது செய்யவேணும் இல்லாட்டி சனம் எல்லாத்தையும் மறந்திட்டு பேசாம இருந்திடும்' என்று என் நண்பன் சொன்னான். உண்மைதான்! எங்களில் பலருக்கு அது மறந்து போய்விட்டது. ஆனால் அன்றைய நாட்களில் நாங்கள் எப்படி ஒடித் திரிந்து உதவினோம் ஆனால் இப்போது!!. எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டது.இந்தச் சுனாமி மட்டுமல்ல பல விடயங்களில் நாங்கள் இப்படித்தான். உடைக்கப்படுகின்ற சோடா போல (குளிர்பானங்கள்). புஸ்... என்று ஒரு சத்தத்துடன் சிலவேளைகளில் வெளியிலும் சிந்தி, பின் அடங்கி விடுவது. ஆக இது இயல்பான ஒன்றே!அப்போ இனிமேல் எங்களில் பலருக்கு சுனாமி குறித்தோ அவை தந்த விளைவுகள் குறித்தோ அக்கறை வராது. எல்லாம் கரைந்து விட்டது. உண்மைதான்! ஆனால் எப்படி இதனை விட்டுவிட்டு இருப்பது? முடியாதே! இப்படி நான் எனக்குள் யோசித்தபடி இருக்கிறேன். . . . .


பாடசாலைக் காலங்களில் நாங்கள் ஏதாவது பரீட்சையில் சித்தியடையவேண்டும் என்றால் இராப்பகல் கண் விழித்துப் படிக்கின்றோம். பலவேளைகளில் பரிட்சையில் வெற்றியும் அடைகின்றோம். பின்னர் வேலை செய்கின்றபோது உயர்பதவியினை அடைவதற்காக பலவழிகளில் சிரமப்பட்டு வேலைசெய்து சிலவேளைகளில் வெற்றியும் அடைகின்றோம். இந்த முயற்சிகளிற்காக செலவிடப்படும் காலம் அனேகமாக சில மாதங்களாக இருக்கும். ஒருவாரத்தில் பரிட்சைக்காக அல்லது வேலை உயர்வுக்காக எங்களைத் தயார் செய்து கொள்வது கடினமே. (பரிட்சை என்றால் வெறும் அரை இறுதிப் பரீட்சை என்று எண்ணமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்)


இதைவிட, காதல் என்று ஒரு விடயம் இருக்கிறதே ஐயகோ!
அது காலத்தினைப் பற்றியெல்லாம் கவலைப்பட வைக்காது. காதலியையோ காதலனையோ அடையும் வரை உள்ளே நெருப்பினை எரித்தபடி இருக்கும். இப்படியே இந்த இடத்தில் நிறுத்திவிட்டு சுனாமிக்கு வருவோம்.


ஏன் சுனாமி எங்களுக்கு இப்படியான தாக்கத்தினை ஏற்படுத்தாமல் சில வாரங்களுள் ஓடி ஒளிந்து கொண்டது?. கல்வித்தேர்ச்சி, பதவி உயர்வு, காதல், போன்றவற்றை விட சுனாமி தாழ்ந்ததா? இங்கேதான் ஒரு விடயம் கவனிக்கப்பட்டாக வேண்டும். கல்வியா வேலையா காதலா சுனாமியா என்பதெல்லாம், நாங்கள்தான் தீர்மானிக்கிறோம். நாங்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தில் தான் எல்லாம் இருக்கிறது. காதலை எடுத்துக் கொண்டால் 'ஓர்மோன்களும்' சேர்ந்து எங்கள் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியினை வழங்குகிறது.


ஆகவே ஒரு விடயத்தில் உள்ள ஆர்வம் அல்லது அவசியத்தன்மை அனேகமாக அந்த விடயத்தில் வெற்றி அடையச் செய்கிறது. இப்படியாயின் புலம்பெயர் ஈழத்தழிழர்கள் (நேரடியாகப் பாதிக்கப்பட்டோரை விட) சுனாமி நிவாரணச் செயற்பாடுகளுக்கு உதவுவது ஆர்வத்திலா அல்லது அதில் உள்ள அவசியத்தன்மையிலா? பெரிதாக இரண்டும் இல்லை என்றுதான் எண்ணுகிறேன்! 'என்னடா சொன்னாய்' என்று எத்தனைபேர் வெகுண்டெழுகிறீர்கள்? ஒருவரும் இல்லை! ஆனால் 'அப்படிச் சொல்லமுடியாது' என்று பலரும் சொல்லுவீர்கள். சுனாமி எங்கள் மனங்களில் 'அன்று' பெரிதாக இடம் பிடித்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 'சர்வதேச ஊடகங்கள்' என்பது என் கருத்து!


ஏனெனில் சுனாமி நாட்டில் பலவித அழிவுகளினைத் தந்திருந்தாலும் கூட இருபது வருடமாக உரிமைப் போராட்டம் நடந்து வரும் எம் நாட்டில் எப்போதாவது இப்படி ஒன்றாய் சேர்ந்து நின்றோமா?. இல்லையே, இப்போது தானே எங்கள் பலம் எங்களுக்கே தெரிந்து இருக்கிறது. அதனால் தான் சர்வதேச ஊடகங்களும் முக்கிய காரணம் என்கிறேன். ஊடகங்களை விட்டுவிட்டு மறுபடி விடயத்திற்கு வருவோம்.


சில விடயங்களைப் பொறுத்த வரையில் எங்களுக்கு இயல்பாகவே ஒரு ஆர்வம் இருக்கிறது. சிலவற்றைப் பொறுத்தவரையில் தேவை இருக்கிறது. இதனால் தான் நாங்கள் அந்த சில விடயங்களில் மும்முரமாக இயங்குகிறோம்.


ஆகவே, நான் சொல்ல வருவது என்னவெனில் இயல்பான ஆர்வத்தினை தவிர்த்து தேவை கருதி சில விடயங்களில் இறங்குவது என்பது நாமே ஏற்படுத்திக் கொள்வது. இதுபோல் சில தீர்மானங்களினை நாம் ஏற்கனவே எங்களுக்குள் அமுல்ப்படுத்தலாம். உதாரணத்திற்கு எங்கள் தேசம் என்று எடுத்துக்கொண்டால்! என் தேசத்தில் பற்று எனக்குள் ஹஎன்றும்' இருக்க வேண்டும். எம் தேசத்தினைக் கட்டியெழுப்பும் பணியில் என் பங்கு என்ன? எப்படியாய் நான் இதைச் செய்யப்போகிறேன் என்றெல்லாம் அக்கறை உடையவனாய் இருக்கவேண்டும் என்று ஒரு தீர்மானத்தினை ஏற்கனவே நான் எடுத்து இருக்கவேண்டும்.


அதாவது சில விடயங்களை நாங்கள், எங்கள், சமூகநலன் கருதி எங்களுக்குள்ளே இப்படி எல்லாம் ஏற்கனவே எழுதி வைத்து விட்டு இருக்கவேண்டும். அப்படி என்றால்தான் ஆர்வமற்ற ஆனால் அவசியமான எங்கள் செயற்பாடுகளுக்கு எப்போதும் உந்துதலினை எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் எங்கள் கருமங்களில் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கலாம் என்பது, இந்த அடியவனின் மிகமிகத் தாழ்மையான கருத்து.

2 comments:

வன்னியன் said...

நல்ல விசயம். என்ன செய்வதாய் உத்தேசம். இப்பதான் உண்மையிலேயே மறுபடியும் வந்திருக்கிறியள்.

எல்லாளன் said...

உண்மையாவே கேக்கிறியளே!
சத்தியமா நான் செய்யோணும் எண்டு ஒரு திட்டம் வச்சிருக்கிறன் இங்க அதை எழுதமாட்டன். ஆனாக் கண்டிப்பா என்ர பங்க செய்யவன்! அதில உறுதி!