Sunday, March 20, 2005

காண்டக்காரர் கதவை...

என் நண்பனின் து}ண்டுதலால் இருபதுகளின் ஆரம்பத்தில் எனக்கு காண்டம் வாசிக்க வேண்டும் (உயர்தர யோசியமாம்) என்று ஒரு ஆசை வர, ஒருநாள் காலை காண்டக்காரர் கதவைத் தட்டினேன். பிறந்த திகதியும் பெருவிரல் அடையாளமும் எடுத்து விட்டு மதியம் வரச் சொன்னார்கள். மதியம்சென்றதும் ஒருவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார் இறுதியில் ஒர் ஏடு ஒன்றினை எடுத்து (அது எனக்குரிய ஏடாம்) வாசிக்கத் தொடங்கினார்.தம்பி நீர் இப்படி, நீர் அப்படி என்று அடுக்கினார். எனக்கு நல்லவேளை அம்மா வரவில்லை என்று தோன்றியது. என்னைப் பற்றிக் கூறியதில் எனதுவெளிநாட்டு பயணமும் இந்த பத்தி எழுதும் வழக்கம்கூட அதில் அடக்கம். அவர்கள் குறித்துச் சொன்ன கால கட்டத்திலேயே லண்டன் வந்துவிட்டேன். இன்று வரை சொல்லியபடி நடந்து வருகிறது. இப்படி இருக்கிற பொழுது நான் எப்படி அதனைப் பொய் என்று சொல்ல முடியும். என்னைப் பொறுத்தமட்டில் காண்டம் என்பது உண்மை! அவர்கள் சொல்லியது சற்றும் பிசகாமல் நடந்து வருகிறது.

ஆனால்!

என்னுடைய உறவினரும் எனக்கு அடுத்த படியாக சென்று காண்.. வாசித்தார். அவருக்கும் பல விடயங்கள் சொன்னார்கள் அதில் அவருக்கு முக்கியமான அவரது வெளிநாட்டுப் பயணமும் அடக்கம் (அதாவது அந்த நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள்). ஆகவே இரண்டு மாதங்களுக்குள் நான் லண்டன் வந்து அவருக்காக காத்திருந்தேன். பல வருடங்கள் ஆகியும் அவர் வரவில்லை அவர் இன்னும் நாட்டில்தான் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை காண்டம் உண்மையானது அல்ல. அப்போ பொதுவான பார்வையில் காண்டம், உண்மையானதா பொய்யானதா. உண்மை என்றும் சொல்ல முடியாது பொய் என்றும் சொல்ல முடியாது. அப்போ என்ன செய்யலாம்?

முதலில் ஒரு சம்பவத்தினைக் கூறிவிட்டு பின்னர் விடயத்திற்கு வருகிறேன். அவர் என் நண்பர், ஒரு சட்டவல்லுனர். அவரது மகனும் அதே தொழிலினைத் தொடரவேண்டும். என்று ஆசைப்பட்டார் .மகனுக்கும் அதில் ஆசை இருந்தது. (நானும் என் அப்பாவைப்போல ஒரு பிரபலமான விஞ்ஞானியாக வர ஆசைப்பட்டேன்) இடையில் தனது மகனுக்கு காண்டம் வாசித்து கல்வி முதற்கொண்டு வாழ்க்கைத் துணைவரை கேட்டுப் பதிவு செய்து வைத்தார். இப்பொழுதுதான் பிரச்சனை.

மகனுக்கு 18 வயதாகி விட்டது. தகப்பனும் ஏதோ காண்டம்தான் இவரது நேரசுசி (time table) என்று மனதில் எழுதிவைத்து விட்டு மகனை அதற்கு ஏற்றாற் போல் வளைத்திருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்படைந்த மகன் இப்போ காண்டத்திற்கு நேர் எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டான். சட்டம் படிக்க முடியாது கடை வைக்கப் போகிறேன் என்கிறான். வாழ்க்கைத் துணைக்கும் எதிர்தான் என்று முடிவெடுத்து விட்டான்.

அவனுடன் பேசச் சொன்னார் என் நண்பர். அவனிடம் பேசியபோது என் நண்பர், மகன் வைத்திருந்த மரியாதையினை இழந்து விட்டார் என்பது புரிந்தது. எனக்கு ஒரு உதாரணம் சொன்னான் "எனது தந்தையிடம் ஜோசியன் யாராவது இன்று பாதையில் இருந்து பணம் பொறுக்குவாய் என்று சொன்னால் அந்தப் பணம் கிடைக்கும்வரை தலையைக் குனிந்து வீதியைப் பார்த்துக் கொண்டுதான் செல்வார் என் அப்பா '' என்றான். பலவிதமாகப் பேசினான். அவனுடைய வயதிற்கு அவனது முதிர்ச்சி சற்று செறிவானதாகவே இருந்தது.

இருப்பினும் இப்படி Anti-அப்பாவாக மாறியதற்குக் காரணம் என்ன? காண்டம்!. ஒருவேளை அவன் சட்டத்திற்குள் நுளை வானாகில் ஓர் பெரும் புள்ளியாக வரக்கூடும் ஏனெனில் அவனது தகப்பனுடைய உதவி இருக்கும் அதைவிட அவனுக்கு "இத்துறையின் ஈடுபாடு'' இயல்பாகவே தகப்பனுடாக கடத்தப்பட்டு இருக்கும். இப்போது எல்லாம் நழுவி விட்டது.

உண்மை, பொய் என்று சொல்ல முடியாதது ஜோசியம் (என் கருத்து). அப்போ என்ன செய்யலாம்? ஒன்றையும் எங்களைக் கட்டுப்படுத்த விடக்கூடாது. சரி நம்புகிறீர்களா பிரச்சனை கிடையாது அப்படியே விடுங்கள் சொன்னது மாதிரியோ அல்லது தலையில் எழுதிய மாதிரியோ நடக்கும். அதைப்பற்றி அக்கறைப் படாதிருங்கள். அதை விட்டுவிட்டு அதன்படிதான் நடக்க வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு விடயமும் நிறைவாய் நடக்காது.

எனக்கு அவர்கள் வினாடிக்கு வினாடி என்ன நடக்கும் என்றா சொன்னார்கள்? இல்லையே! ஆகவே நானே சிலவேளை நடக்கின்ற சம்பவங்களினை அவர்கள் சொன்னவற்றுடன் பொருத்தி விட்டேனோ தெரியாது. நான் ஒரு முறை செய்யும் தொழிலை விட்டு விலகுவேன் என்று சொன்னார்கள். இன்றுவரை ஆறு இடங்களில் இருந்து விலகி விட்டேன். ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொன்னார்களோ என்று கேள்வி எழும். இப்படிக் கண்டதற்கெல்லாம் ஒரு காண்டம் வந்து! என் முன்னின்று பல் இளிக்கும்.

எந்த விடயத்திலும் நிறைவிருக்காது. ஒருமுறை பத்திரிகை ஒன்றில் ராசிபலன் பக்கத்தினை வாசித்து எல்லா ராசியும் எனக்குப் பொருந்துவதை அறிந்தேன் உண்மையினைச் சொன்னால் எல்லாவற்றினையும் எனக்கு ஏற்றாற்போல் பொருத்தி இருக்கிறேன். இந்த சம்பவத்தோடு சகலவற்றினையும் கைவிட்டேன்.

மேற்சொன்ன என் நண்பரின் சம்பவம்தான் இங்கே இப்பத்தியினை எழுதத் து}ண்டியது. எத்தனைபேர் என் கருத்தினை ஏற்றுக் கொள்கிறீர்களோ தெரியவில்லை! ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் நான் பெற்ற தெளிவு பெறவேண்டும் இவ்வுலகு அவ்வளவுதான்.

1 comment:

Anonymous said...

நடக்கும் மென்பார் நடக்காது
நடக்கா தென்பார் நடந்துவிடும்
கிடைக்கு மென்பார் கிடைக்காது
கிடைக்கா தென்பார் கிடைத்துவிடும்