Thursday, January 27, 2005

புலம் பெயர்ந்தோர் சினிமா

இன்று நாங்களும் திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்கிற ஆசை புலம்பெயர்ந்த பல தமிழர்கள் இடையே துளிர்த்து வருவதனை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நேரத்தில் இவ்விடயம் குறித்து எழுதுவதே சாலச்சிறந்தது என எண்ணுகிறேன். நாம் வாழும் இந்த நாடுகள், பொதுவாக எல்லா துறைகளிலும் உச்ச நிலையிலேயே இருக்கின்றன இப்படியான நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் திரைப்படங்கள், எப்படியான ஒரு தரத்தினை உடையதாக இரக்கின்றது? இதுபற்றி நான் சொல்லி நீங்கள தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பத்துப்பேர் ஒன்று கூடுவார்கள், திரைப்படங்கள் எடுக்கவேண்டும் என்கின்ற தங்கள் ஆசை பற்றி அதில் சிலர் பேசுவார்கள் "எடுக்கிறமடா" என்று ஒரு சபதம் இடுவார்கள். இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்கவேண்டாம், எனக்குத்தெரியும். பின் இவர்கள் அறிமுகமான சிலருடன் சீரியசாக பேசுவார்கள், நடிகர்கள் தேடுவார்கள்! பணம் என்பார்கள்! சேவை என்பார்கள்! இப்படி ஒவ்வொரு விடயமும் வளர்ந்து கொண்டு வரும், அதன் பின் படமும் வெளியில் வரும்.


ஆண்டவனின் அருளுக்காகவோ என்னவோ இப்படத்தினை அனேகமாக ஆலயங்களிலேயே காண்பிப்பார்கள். ஆக இவர்கள் திரைப்படம் என்று "ஏதோ" ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். என்ற அந்த முயற்சியினை பாராட்டலாம், அதாவது கொலம்பஸ் இந்தியா என்று எண்ணி மேற்கிந்திய தீவுகளை கண்டுபிடித்தது போல ஆனால் நிச்சயமாக அந்த "படத்தினை" யாராலும் பாராட்ட முடியாது, ஏனெனில் அது படமே அல்ல அதையும் தாண்டி.....

தானும் எடுக்காமல் எடுப்பவனையும் விடாமல்..... என்று சிலர் பொங்கி எழுவீர்கள். நான் இப்படி எல்லாம் எழுதுவதால் எனக்கு விருது ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
இத் துறையில் எங்கள் நிலை குறித்து சற்று எண்ணிப் பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. சாதாரணமாக, வீடுகளில் இப்படத்தின் பிரதியினை போட்டுப் பார்த்தால் ஏதோ பிறந்த நாள் கொண்டாட்டம் என்றோ திருமண வீட்டில், கை கலப்பினையும் சேர்த்து தவறுதலாக எடுத்து விட்டார்களோ என்றோ தோன்றும்.

ஒரு முறை நான் படைப்பாளி ( ?? ) ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது தொலைக் காட்சியில் ஒருவர் ஒரு சிறுவனுடன் பாக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். அது அவருடைய திரைப்படம் என்று எனக்குத் தெரியாது, நான் அவரிடம் அவர் சொந்தக்காரரா? என்று கேட்டேன் , ஆம்! என்றார், எங்க கனடாவிலா இருக்கிறார்? என்றேன், இல்லை! என்றார், பின்ன ஈரோப்பா? என்றேன், "ச்ச...இந்தாள் இங்கதான் இருக்குது!" என்றார், பிறகேன் இப்படி இவரை TVல பார்க்கிறீங்கள் என்றேன், "இது என்ர படம் ஐசே!" என்றார்.

நான் என்ன செய்வது பாக்கில் ஒருவர் ஒரு சிறுவனுடன் விளையாடும்போது எனக்கு இது ஒரு படம் என்கிற உணர்வினை அந்த "அது" தந்திருக்க வேண்டும், ஆனால் நான் யாரோ ஒரு உறவினர் தன் மகனை வீடியோ எடுத்து இவருக்கு அனுப்பி இருக்கிறார் என்றுதான்; நினைத்தேன். நான் இந்த திரைப்பட முயற்சியினை பற்றி பேசியபோது அவர் கடும் சிரத்தையெடுத்துத்தான் இம்முயற்சியில் வெற்றிபெற்று இருக்கிறார் என்று உணர்ந்தேன். (வெற்றி என்று நான் சொல்வது படத்தினை முழுதாய் எடுத்து முடித்ததையே )அதற்காக இப்படியான ஒரு படத்திற்கு அவரை நான் எப்படிப் பாராட்டமுடியும்?.

இந்தியச் சினிமாவில் எத்தனையோ பேர் சேர்ந்து முழுநேரமாக திரைப்பட முயற்சியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் நாங்கள் அப்படி அவர்கள்போல் இயங்க முடியாது, இது எங்களுக்கு பகுதிநேர வேலை போலத்தான், என்பது பலரின் வாதம். உண்மைதான்இப்படி முழுநேரமாக இயங்க முடியாது என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இந்த முயற்சியில் இறங்கும் எத்தனை பேருக்கு திரைப்படத்தினை எப்படி உருவாக்குகிறார்கள் என்று தெரியும்?. அதாவது Plot, Story, Subplot, Screenplay, Dialouge, Story board, Direction, Cinematography, இப்படி நீளும் பட்டியல் குறித்த அறிவு எத்தனை பேருக்கு உண்டு.

இதனை விட்டுவிட்டு ஒரு கமெராவையும் இரண்டு லைட்டுகளையும் துக்கிக்கொண்டு "நல்ல கதை கிடைச்சிருக்கு படமெடுக்கிறம் என்று எடுத்தால்" எதிர்காலத்தில் அவரவர் சொந்த வீடுகளில்தான் படங்களை திரையிடவேண்டும். எங்களால் நல்ல காத்திரமான படங்களினை உருவாக்க முடிவதில்லையே, (தொழில்நுட்ப பக்கத்தினை விட்டுவிடுவோம்) ஒரு தாய் கடன் பெற்று படிக்கவைத்த தன்மகன் முதல் நாள் வேலையில் விபத்தாகி இறந்துவிட்டான். என்பதை அறியும்போது அந்ததாய்க்கு ஏற்படும் உணர்வு (படமென்று தெரிந்தும்)தொலைக்காட்சி ஊடாக வந்து எமக்கு ஏதோ செய்யுமே, அப்படி ஏன் எங்கள் திரைப்படங்கள் ஏதுவும் செய்வதில்லை?.

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவனின் அறிவும் அனுபவமுமே காரணம் எங்களுக்குத்தான் இரண்டும் இல்லையே (சினிமாத்துறையைப் பொறுத்தவரையில்)அவ்வாறாயின் ஏன் நாங்கள் இது குறித்தான பாடநெறிகளை கற்ககூடாது?, எத்தனையோ கல்லூரிகள், பல்கலைக்களகங்கள் இந்தத்துறை சார்பாக பாடநெறிகளினை வைத்திருக்கிறபோதும் நாங்கள் ஏன் கற்ககூடாது? இந்தத்துறை எங்களுக்கு பாriட்சயமானால், இங்கிருந்து எத்தனையோ ஆயிரம் கொடுத்து இந்தியாவில் திரைப்படங்கள் வாங்கும் வினியோகஸ்தர்கள் எங்களை நம்பி எங்கள் முயற்சிக்கு பணம் போடத்தயங்க மாட்டார்கள், எங்கள் திரைப்படங்கள் திறம்படவருமாயின் அவற்றினை பல நாடுகளில் திரையிடலாம் (கோவில்களில் பொதுஇடங்களில் அல்ல).

இதனை விட்டுவிட்டு "இவங்கள் அவனுகளுக்குத்தான் உதவி செய்வானுகள், பேசாமல் அதைப் படிக்கிற நேரத்துக்கு முண்டு படம் எடுத்திட்டு போய்விடலாம்" என்று சொன்னால் இந்தத் தலைமுறை மட்டுமல்ல இனிவரும் தலைமுறையும் கோவிலிற்குள்தான் படம் பார்க்கும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, January 26, 2005

இரண்டு நிமிட மௌனம்

இன்றுடன் அந்த நிகழ்வுக்கும் அழிவுக்கும் மாதம் ஒன்று -இருப்பினும்
அதன் சுவடுகளும் அது தந்த வடுக்களும் இன்னும் அழிவதாய் இல்லை

இழந்த ஆத்மாக்களின் சாந்தி வேண்டி -இருக்கும் நான் இரண்டு நிமிட மௌனம் செலுத்துகிறேன்.

Thursday, January 20, 2005

Writable and Rewritable CDs

நான் பத்திரிகைக்கு பத்தி எழுதும் வழக்கம் உடையவன். ஒரு நாள் "நீ இப்பிடி எல்லாம் எழுதிறதால சனம் எல்லாம் யோசிக்குது, நடக்குது எண்டு நினைக்கிறியா'' என்று என் நண்பன் கேட்டான். நிச்சயமாய் எல்லோரும் கேட்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் எல்லோரும் யோசித்தால், நடந்தால், உலக சமனிலை குழம்பிவிடும்.

எப்போழுதும் இரண்டு சாராரும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதாவது என்னை விட்டுவிடுங்கள் நான் பெரும் எழுத்தாளன் எல்லாம் கிடையாது. ஆனால் இந்த பூமியில் எத்தனை அறிவாளிகள் தோன்றி எழுதி உரைத்து மறைந்து இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மாவறிஞர் அரிஸ்டோரிலுக்கு என்ன நடந்தது? அவர் என்ன பேசுகிறார் என்பதையே விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் அவருக்கு மரணதண்டனை வழங்கினார்கள். இருப்பினும் சிலர் அவருடைய சீடர்களானார்கள். ஆக இப்படி எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டு இருப்பார்கள், ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் து}க்கிப் போட்டுச் செல்லுவார்கள்.

அதாவது ஒரு பூ! பூத்து மணம் பெருக்கி அழகு காட்டி, பின் காய்ந்து விடும். அதன் மணத்தினை சிலர் ரசித்து இன்பம் காண்கிறார்கள். இதுபோலத்தான் நானோ அல்லது பெரும் எழுத்தாளர் களோ எங்களுக்குப் படுவதனை எழுதுகிறோம். எடுப்பவர்கள் எடுக்கிறார்கள் மற்றவர்கள் மறுக்கிறார்கள், அவ்வளவுதான். இதனைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டு இருந்தவேளை ஒரு விடயம் எனக்குப் புலப்பட்டது.

அது என்னவெனில் நாங்கம் பயன்படுத்தும் 'இறுவட்டு"

ஆ... என்ன அது??

அதுதான்! CD இந்தச் CDக்களில் இருவிதம் ஒன்று WritableCD மற்றயது Rewritable CD. ஒருதடவை பதிவு செய்த பின்னர் மாற்றம் செய்ய முடியாதது WritableCD. ஆனால் தேவைக்கேற்றபடி மாற்றிப் பதிவு செய்யக் கூடியது RewritableCD. இதனை அப்படியே மனித மனங்களுடன் ஓப்பிட்டால் ஒரு விடயத்தில் ஒருவர் சின்னவயதில் அல்லது ஏதாவது ஓர் ஆரம்பத்தில் இருந்து வைத்துள்ள கருத்தினை என்னாளும் மாற்றாமல் இருப்பது Writable CD வர்க்கம்.

மாற்றங்களுக்கு ஏற்றபடி மாத்திரம் சிலவேளைகளில் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுவது. RewritableCD வர்க்கம். அப்படி என்றால் எதை எழுதினாலும் அல்லது எதை உரைத்தாலும் புதிதாக கருத்து என்று வருகிற பொழுது Writable வர்க்கம் மாறப்போவது கிடையாது. Rewritable வர்க்கம் மட்டுமே தேவையென்றால் மாற்றிக்கொள்ளும். அப்படி என்றால் இவ்வளவு நேரமும் இதில் எழுதியது வீணானதா?

இல்லை! ஏனெனில் நாம் எந்த வர்க்கத்தில் இருக்கிறோம் என்பதை நாங்கம் அறிந்து விட்டு இருக்கிறோமா? இதுதான் இங்கு தேவையாகப் படுகிறது எனக்கு. நான் Rewritable ஆகவே இருக்க விரும்புகிறேன். ஆனால் நான் அப்படி இருக்கிறேனா? பலர் தாங்கள் அப்படி என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் இதனைத் தாங்கள் எடுக்கும் முடிவுகளினுடாக அறிந்து கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து. என்ன குழப்புகிறேனோ?

சரி இலகுவான முறையில் சொல்ல ஒரு வழி! அதாவது இந்த Writable வர்க்கத்திலும் மிகவும் "மலிவான" கருத்துக்களை உடைய "சிலர்" பேச நான் கேட்ட வாசகங்கம் இதோ!

- வர்ண(சாதி) வேறுபாட்டைக் கொண்டு வந்தது கிருஸ்ணர். அப்படி எண்டா சும்மா இவயலின்ர கதைகளைக் கேட்டிட்டு அதுகளை விடுறது மிகப் பெரிய பிழை! ஏனெண்டா அது கிருஸ்ணரை அவமதிக்கிறதுக்குச் சமன்.

-எங்கட விழுமியங்கள் பற்றி எங்கட பிள்ளைகளுக்குத் தெரியோணும் ஊரில எங்களுக்கு ஒரு சீதனக் காணி இருக்கெண்டு அவைக்கு நாங்கதான் தெரியப்படுத்தோணும்.

இவைகள் வெறும் உதாரணங்கள் தான். இப்படி ஆயிரம் விடயங்கள்! வெள்ளையன், கறுப்பன், வேலை, வாகனம், என்று நீளுகிறது பட்டியல் இவ்வகையான விடயங்களினை எம்மை விட்டு அகற்றாமல் அல்லது மாற்றாமல் இன்னும் வைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம். இப்படி சில போதிக்கப்பட்ட அல்லது எழுதப்படாத வரையறைகளுக்குள் இருப்பதனால் எங்கள் "சிந்தனைத் திறனும்" ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது.

ஒர் உதாரணத்திற்கு;

இராவணன் என்று சொல்லுகிறபோது எத்தனைபேர் அவன் எங்கள் நாட்டு அரசன் என்று எண்ணுகிறோம் எத்தனைபேர் அவன் ஒர் கொடிய அரக்கன் என்று பார்க்கிறோம். இரண்டாவதுக்கு வலுவான வாக்குகள் கிடைக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. காரணம் எங்களுக்கு, பாடசாலையில் இராமனை உத்தமனாகவும் இராவணனை கொடியவனாகவும் காண்பித்து விட்டார்கள் (இதற்கு மேல் நாம் சிந்திக்கவில்லை). இதனால் எம்மில் சிலர் இராமனை வணங்கவும் செய்கிறார்கள்.

இவ்வகையாக ஆயிரம் விடயங்கள் எங்களை அவமதிக்கக் கட்டிய கட்டுக்கதை என்று சொல்ல, இவன் விசரன் என்று நினைப்பவர்கள் அப்படியே இருப்பார்கள்.

சிலர் என்னடா இவன் ஏதோ சொல்லவாறான் போல... என்று இழுக்கிறீர்களா? அந்த ஆர்வம் உடைய நீங்கள்தான் Rewritable வர்க்கம்.

வருக! வருக! வாழ்க! வளர்க!

Saturday, January 15, 2005

அடுத்ததாய் என்னவென்று. . .

எங்கோ மண் பிளக்க!
நீள் கடல் நிலை குலைக்க!
எம்மவர் உயிர் தொலைக்க!
வந்ததே இந்தப் பேரிடர்!
எங்கு போய் முறையிட!
யாரை நான் குறை கூற!

நிலம் நடுங்கியதே அதையா?
ஆழி நிலை குலைந்ததே அதையா -இல்லை
அணுமுதல் அனைத்தும் அசைக்கும் அவனையா?
யாரை நான். . . ?

ஏ கடலே! என்று எறி விழுகிறார்கள் சிலர்
காலனே! என்று கதறி அழுகிறார்கள் பலர்
துரோகி என்று காறி உமிழ்கிறார்கள் சிலர்
என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு !

கடலை வையலாம்
நிலம் பிளந்த வையத்தை வையலாம் -இல்லை
இவை யாவையும் வைத்தவனைக் கூட வையலாம்?
வைது நான் என்ன செய்ய?

மாண்டவர்கள் மீண்டு வருவார்களா?
சிதைந்தவைகள் செழிக்கப் போகின்றனவா?

மனித சமுதாயத்தின் அறிவிற்கு எட்டாமலேயே -எத்தனையோ
விடயங்கள் இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன!

அத்தனையினையும் எண்ணி எண்ணி அழுவதை விட -ஆக்கபூர்வமாய்
என்ன செய்யப்போகிறோம்! என்பதிலேயே கருத்தாய் இருக்கிறேன்

சுனாமி!
சுனாமி எங்கள் அடுப்புமுதல் அரசியல்வரை அசைத்துவிட்டு இருக்கிறது
எங்கள் உயிர்களை எடுத்து எங்கள் உடைமைகளை அழித்து
எங்கள் உரிமைகளை நன்றாய் உலகறியச் செய்திருக்கிறது
ஏன் என்று எட்டவில்லை இந்த மனித புத்திக்கு

உரிமையின் உண்மையினைச் சொல்ல!
இத்தனை பேரழிவா அதன் ஊழியத்தின் கூலி?

உலகறியச் செய்ததோ , உலகழிக்கச் செய்ததோ நானறியேன்!

இருபது வருடங்களாய் மெல்ல மெல்ல எழுந்து நிமிர்ந்தபோது,
எம் தேசம்! இயற்கையால் தட்டி விடப்பட்டு தடுமாறிக் கொண்டு இருக்கிறது

அது என் தேசம்! என் உயிர் பிறந்த தேசம்!
நானும் என் அண்ணனும் ஓடி ஆடிய தேசம்
வகை வகையாய் என் தங்கைக்கு வளை வாங்கிக் கொடுத்த தேசம்

இன்று!
என் அண்ணண்மாரை இழந்தேன்!
என் தங்கைமாரை இழந்தேன்!
தம்பி, அக்கா, அன்னை என ஆயிரம் பேரை இழந்தேன் ஏதிழக்கினும் -நான்
ஒருபோதும் என்னுயிர்த் தேசம் இழக்கேன்

அது எம் தேசம்! அது எம்முயிர்த் தேசம்
அதை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பும் எம்முடையதே!.

சாலைகள் அமைக்கலாம்!
ஆலைகள் அமைக்கலாம்!
உதவி செய்வோர்க்குத் து}ண்களாயும் நிக்கலாம்!
என்ன செய்யப் போகுறோம் நாம்?
அது எம் தேசம்!
அது எம்முயிர்த் தேசம்!

அழிவுகளும் அனர்த்தங்களும் அனைத்தினையும் கொண்டு போகலாம்
எங்கள் உயிரில் ஊறி ஓடும் ஒற்றுமையினைத் தவிர!

அங்கே நீலக்கடல் எழுந்து, விழுந்த பொழுதிலிருந்து -இங்கே
ஒற்றுமைக் கடல் எழுந்து, நிமிர்ந்து, நிலைத்து, நிற்கிறது!

இந்தச் சுனாமி செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கிடையாது- இருப்பினும்
ஒரே ஒரு விடயத்திற்காய் மாத்திரம் நான் ஆறுதல் அடைகிறேன்

ஈழத்தமிழனின் ஒற்றுமையின் பலம் -பல
தமிழர்களுக்கே இதனால்த் தானே தெரிந்தது!

அலைகளை மறக்கிறேன்!
அழிவுகளையும் மறக்கிறேன்!
அடுத்ததாய் என்னவென்றே!
எண்ணியபடியே நடக்கிறேன். . . . .

வாழ்க தமிழ் -அல்ல அல்ல
வாழும் தமிழ்
வெல்கிறோம் தமிழீழம்