Friday, May 20, 2005

வீழ்வேனென. . .

வழமைபோல் நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவன் சினிமாவைத் தவிர வேறு எதுவும் பேசமாட்டான். அன்று "விஜய்"யாயணம் பேசினான். அவன் அப்படி இப்படி என்றெல்லாம் சொன்னான். அதற்கு நான் ரஜினியைக் கொப்பி அடிக்கிறதுதானே விஜயின் பிரதான வேலை என்றேன். அதற்கு அவன் விஜய் ஒரு போதும் ரஜினியைக் கொப்பி அடிப்பதில்லை. ரஜினி படத்தில் வருகிற கட்டங்களினை தன்னுடைய திரைப்படங்களில் தனக்கு ஏற்றாற்போல் பாவிப்பது மட்டுமே உண்மை என்றான். அந்த உரையாடலே இன்றைய இதழின் இப்பத்தியினை எழுதத் து}ண்டியது.
மண்ணில் பிறக்கிறோம் வளர்கிறோம் உழைக்கிறோம் சில காலத்தின் பின்னர் இறக்கிறோம். இதுதான் வாழ்க்கை. இதை வெறுமனே பிறக்கிறார் பின்னர் இறக்கிறார் என்றும் சொல்லலாம். அதே நேரம் இந்த மண்ணில் குழந்தையாய் பிறந்து சிறுவனாகவோ சிறுமியாகவோ இருந்து வாலிபப் பருவம் அடைந்து பின்னர் குடும்பஸ்தராகி வயது முதிர்ந்து இறக்கிறார் என்றும் சொல்லலாம். இப்படிப் பார்க்கிறபோது ஒரு மனிதனுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை அவன் பெரும் பயணம் ஒன்றினை மேற்கொள்கிறான்.
இப்படியான பயணத்திற்கு உட்பட்டவர்கள்தான் அரிஸ்ரோட்டில், சோக்கிறரீஸ், திருவள்ளுவர், பாரதியார் யாவருமே. இவர்களைப் போல பலரை இங்கு உதாரணத்திற்கு இலகுவாகக் குறிப்பிடலாம். ஆனால் இப்படியானோருக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணிப் பார்க்கிறோமா? அனேகமாக நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மட்டுமே அக்கறைப் பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதாவது பிள்ளைகளுடைய வாழ்க்கை, வீட்டு மோட்கேஜ், வேலை என்று எங்களையே சுற்றிக் கொண்டுள்ள அக்கறைகள்.
அரிஸ்ரோட்டில், சோக்கிறரீஸ், திருவள்ளுவர், பாரதியார் போன்றோருக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் இந்த மனித சமுதாய வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பினைத் தந்து விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். அரிஸ்டோரில் தத்துவம் சோக்கிறடீஸ் தத்துவம் திருவள்ளுவர் குறள் பாரதியார் கவிதைகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமூகத்திற்கு உதவியது மட்டும் அன்றி இன்றும் பலருடைய வாழ்க்கைப் பயணத்திற்கு உதவிக் கொண்டு இருக்கிறது. உதவிக் கொண்டு இருக்கிறது என்பதைவிட மனித சமுதாயதிற்கு அல்லது இந்தப் பூமிக்கு தங்களுடைய பங்கினைச் செலுத்திக் கொண்டு இருக்கிறது.
இவர்கள் வேறு வேலையே இல்லாமல் இருக்கவில்லை உதாரணத்திற்கு மாகாகவி பாரதியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மனிதருக்கு எத்தனை சிக்கல். வெள்ளையருடன் பிரச்சனை, வீட்டில் வறுமை இப்படி எல்லோருக்கும் இருக்கிற அன்றாட பிரச்சனைகள் பாரதிக்கும் இருந்தது. இருந்தாலும் இன்று பாரதி, மாகாகவி. இதனால் பிரபல்யம் அடைய வேண்டும் என்று சொல்ல வரவில்லை. எங்களால் நாங்கள் வாழும் இந்த உலகத்திற்கு என்ன பயன்? இன்றைய மனித சமூதாயத்திற்கு இனிவரும் மனித சமுதாயத்திற்கு என் பங்களிப்பு என்ன? இதற்காக நான், மனிதர்கள் யாவரும் இதே சிந்தனையோடுதான் வாழவேண்டும் என்று சொல்லவில்லை.
உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கள் நான் ஏதோ பிறந்தேன் கொஞ்சநாளில் இறப்பேன் இடையில் வாழ்வேன் என்று இருந்தால் அது என்ன வாழ்க்கை? எனக்குப் பெயர் வைத்தது என்னை மற்றவர்கள் வெறுமனே அழைக்க மட்டும்தானா? "எல்லாளன்'' என்று பெயர் வைத்துவிட்டு எல்லோர் போலவும் சும்மா வாழ்ந்து கொண்டு இருந்தால் "எல்லாளன்'' என்று பெயர் வைத்து மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தப்பட்டு இருக்கவேண்டிய அவசியம் என்ன? (எல்லாளன் புனைபெயராக இருப்பினும்).
இதனால்தான் சொல்கிறேன் நான் இந்த பூமியில் வாழ்ந்து முடிக்கு முன்னர் ஏதாகிலும் இந்த உலகத்திற்கு அல்லது மனித சமுதாயதிற்கு குறைந்தது எனது தமிழ் சமூகத்திற்கு செய்து விட்டுச் சாகவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்த்தான் இந்த பூமிக்கு எங்களால் ஏதாகிலும் பிரியோசனம். அல்லது நாங்கள் பூமிக்கு வெறும் வெற்றுக் கடதாசிகள்.
விஜய் ரஜினியின் சில சீன்களையே எடுத்துத் தனக்கு ஏற்றால் போல் பயன்படுத்துகிறார் என்றால். விஜய் என்பவர் யார்?. சினிமாவிற்கு ஏதோ ரஜினி செய்கிறார். விஜய் என்ன செய்கிறார். ரஜினி போல வர முயல்கிறார். அப்படி என்றால் சினிமாவில் விஜயின் பங்களிப்பு என்ன? தனித்தன்மை என்ன? ரஜினியைக் கொப்பி அடிக்கிறார் என்றால் விஜய் என்பவர் எதற்கு? ஒவ்வொருவருக்கும் ஒரு தீர்க்கமான முடிவு இருக்கவேண்டும் பாரதிக்கு இருந்தது.
அது. . .

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல்
நான் வீழ்வேனென நினைத்தாயோ
இனியென்னைப் புதிய உயிராக்கி
மதி தன்னை மிகத்தெளிவு செய்து
என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, May 06, 2005

மண மாக்கட்

"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே.
என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது என்பது எளிதில் இயலாத காரியம் (?) . ஆனால் அதுவெல்லாம் இப்போ அக்கறைப் படத்தேவை இல்லாத விடயம்.
அதைவிட மேல் எழுதியவற்றிற்கும் இனி வரப் போவதற்கும் சம்பந்தமே இல்லை. "பிறகேன் எழுதுகிறாய்'' என்று கேட்பீர்கள். வேறொன்றும் இல்லை "எங்கள்" திருமணம் குறித்து மிகவும் குளம்பிப்போய் உள்ளதால் உங்களையும் ஒரு "குளப்பு" குளப்பி விடுவோமே என்பதே என் நோக்கம். குளப்பம் என்னவெனில் எங்கள் திருமணங்கள் "மலிவானதாகப்" போய்க்கொண்டு இருக்கிறதா என்பதுதான்.
திருமணம் என்பது இரண்டு முறைகளின் ஊடாகத்தான் நடைபெறுகிறது. முதலாவது காதல் இரண்டாவது காதல் அல்லாதது (டேய். . .டேய். . . ) காதல்த் திருமணங்கள் அவ்வளவு சிக்கல்களினை ஏற்படுத்துவதில்லை. (ஒன்று இரண்டினைத் தவிர) காதல் அல்லாத திருமணங்கள் இருக்கிறதல்லவா அதில் தான் பெரும் சிக்கல் இருக்கிறது. அதாவது மாப்பிள்ளையினைத் தெரிவு செய்யும் முறை அல்லது பொம்பிளையை தெரிவு செய்யும் முறை. இதில் அனேகமாக பெற்றோரினது தலையீடு மட்டுமே காணப்படும் ஆனால் பிள்ளைக்கு புகைப்படம் காண்பிக்கப் படும் வாய்ப்பும் உண்டு.
மாப்பிள்ளை வெளிநாடா, உள்ளுரா, என்ன வேலை செய்கிறார் என்பதுதான் முதற் கட்டக் கேள்விகளாக இருக்கும். பின் பெற்றோர் யார்? என்ன சாதி? என்ன செய்யினம்? இப்படிக் கேள்விகள் வரும்.
ஆக குறிப்பிட்ட வயது வர ஒன்றைப் பிடித்துக் கட்டிக் கொடுத்து அவர்கள் தார்மீகக் கடமைகளை முடித்து விடவேண்டும். என்பதில் தான் அக்கறை உண்டு அவர்களுக்கு. தனிப்பட்ட அந்த இருவர் தொடர்பான அக்கறை இன்றி, சரி பேசினோம், கட்டிக் கொடுத்தோம் என்ற போக்கில் இப்போ பல திருமணங்கள் நடந்தேறுகின்றன.
எனக்குத் தெரிய திருமண நாள்வரை மாப்பிள்ளையின் முகம் தெரியாது இருந்த ஒரு பெண்ணும் இருக்கிறாள். (இப்படியானவர்கள் மிக அரிதுதான்) ஏன் என்று திருமணப் பேச்சு வார்த்தைக் காலத்திலேயே பெண்ணின் தந்தையிடம் கேட்டேன். ( பெண் நாட்டில் இருந்தவேளை) அவள் "நீங்கள் பாருங்கோ அப்பா! நான் இல்லை எண்டோ சொல்லப் போறன்'' என்று சொன்னதாகச் சொல்லி மகளைக் குறித்துப் பெருமைப்பட்டார். நான் கவலைப்பட்டேன்.
இன்று எத்தனைபேர் திருமணம் குறித்து "அக்கறையாக'' இருக்கிறார்கள். போன வாரம் ஒருவர் என்னிடம் இப்படிச் சொன்னார். "இஞ்ச! ஊரில ஒரு பிள்ளை இருக்கிது எக்கவுன்ஸ் டிபாற்மென்ட் ஒண்டில வேலை செய்யுது. ஆரும் கேட்டாச் சொல்லும், இங்க வந்தாலும் வேலை செய்யிறதுக்குப் பிரச்சனை இருக்காது" என்று.
இதை அவர் சொன்னபோது நான் ஏதோ கார் ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். அதனால் "எப்பயாவது Offerல வரேக்க சொல்லுங்கோ அப்ப பாக்கிறன்'' என்று சிரித்து விட்டு வந்தேன் (அந்தப் பெண் அவருக்கு மூன்றாவது நபராக இருந்தபடியால் நான் அப்படிப் பேசியது கோபத்தினை ஏற்படுத்தவில்லை). அவர் எனக்குப் பின்னால் வந்தவரிடம் இது பற்றிப்பேசிக் கொண்டு இருந்தார். அவர் இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ விதத்தில் ஒரு சங்கடத்தினை எனக்கு அது ஏற்படுத்தியது.
பெண்ணோ ஆணோ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும் அல்லவா அந்த உணர்வுகள் ஒன்று சேர இருக்கும் இருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்துப்போக வேண்டும் அல்லவா! இதை எல்லாம் குறித்து அக்கறைப் படாமல், வெறுமனே லண்டன் என்று திருமணத்திற்காக ஒரு பெண் அல்லது ஆண் இங்கு வருகிறார் ஆயின், அவர் காதல் யார் மீது? எனக்கேதோ லண்டன் மீது என்றே படுகிறது.
வாழ்க்கை வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டதா?மனித உணர்வுகளுக்கு இருந்த மரியாதை மரணித்து விட்டதா?
இல்லை இதுதான் நடைமுறை வாழ்க்கையா?
இது எங்களுக்கு மட்டும்தானா?
இது எங்கள் கலாசாரம் சம்பந்தப்பட்டதா?

இதற்கெல்லாம் பதில் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன். அதுவரைக்கும் நீங்களும் நான் இவ்வளவு நேரமும் கூறிய அனைத்துப் பிரச்சனைகள் குறித்து கொஞ்சம் யோசிங்க! முடிந்தால் எனக்கும் ஏதாவது உதவி செய்யுங்கள்